தையல் ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது


தையல் ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2018 10:15 PM GMT (Updated: 5 Dec 2018 9:18 PM GMT)

தையல் ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி கனிமொழி (வயது 35). இவர் தையல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் கீழமத்தூர் கிராமத்தில் பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து விட்டு வீட்டிற்கு பெருமத்தூர்-முருக்கன்குடி சாலை வழியாக ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் ஹெல்மெட் அணிந்தவாறு வந்தனர். இதையடுத்து அவர்கள் கனிமொழி கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது தொடர்பாக கனிமொழி மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், சங்கர் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கனிமொழியிடம் தாலி சங்கிலியை பறித்தவர்கள் அரியலூர் மாவட்டம், கோவில் எசனை கிராமத்தை சேர்ந்த சுதாகர் (35), திருச்சி மாவட்டம் தா.பேட்டையை சேர்ந்த மனோஜ்குமார் (32) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சுதாகர், மனோஜ்குமார் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story