பள்ளியாடி அருகே மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் பொதுமக்கள் மனு


பள்ளியாடி அருகே மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 6 Dec 2018 2:47 PM GMT)

பள்ளியாடி அருகே மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

பள்ளியாடி பங்குத்தந்தை பெனடிக்ட் அனலின் தலைமையில், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், பள்ளிகளின் தலைமை ஆசிரியைகள் அருட்சகோதரி லில்லி ஜெயரீட்டா, வசந்தி, விஜி மற்றும் பள்ளியாடி, வாகவிளை, குழிவிளை, செக்கிட்டவிளை, ஆயன்விளை கிராம பொதுமக்கள் ஆகியோர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

பள்ளியாடி பகுதியில் பல தொடக்க மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதி, கோவில் என வெவ்வேறு மத வழிபாட்டு தலங்களும் உள்ளன. அத்துடன் வங்கிகள், மருத்துவமனைகளும் உள்ளன.

பள்ளியாடி அருகே மானாங்கண்ணிவிளையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. அது சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் விதிமீறல் செய்யப்பட்டு கடை திறக்கப்பட்டு இருப்பதாகக்கூறி ஊர் பொதுமக்கள் போராடியதின் விளைவாக சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு அந்த கடை மூடப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

 இந்தநிலையில் மீண்டும் அதே இடத்தில் கடந்த 4–ந் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.

இந்த கடை முன் உள்ள பாதை வழியாகத்தான் சுமார் 250 வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பள்ளிக்கூட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் நடந்துள்ளன. இனிமேலும் நடக்க வாய்ப்பும் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை மூடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story