பாபர் மசூதி இடிப்பை கண்டித்து த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பை கண்டித்து த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 6 Dec 2018 5:12 PM GMT)

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், பாபர் மசூதி இடிப்பை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நூர்முகமது தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரிஸ்வான், த.மு.மு.க. முன்னாள் மாவட்ட தலைவர் சுல்தான், மாவட்ட பொருளாளர் ஜாவித், மாவட்ட துணை செயலாளர்கள் தாஜுத்தீன், யாசின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வாகித்பாஷா வரவேற்று பேசினார்.

இதில் மனித நேய மக்கள் கட்சியின் வணிகர் சங்க மாநில செயலாளர் மதுரை காதர் மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராணிப்பேட்டை ஹசன் ஆகியோர் பங்கேற்ற கண்டன உரையாற்றினர். கிருஷ்ணகிரி டவுன் கமிட்டி தலைவர் இர்பானுல்லா ஹுசைனி, காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி துறை தலைவர் ஆறுமுகசுப்பிரமணி, பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினார்கள். முடிவில் நகர தலைவர் பைரோஸ் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பாபர் மசூதியை அதே இடத்தில் மீண்டும் கட்டிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில், மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் அதே இடத்தில் பாபர் மசூதியை கட்ட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஷபியுல்லா வரவேற்று பேசினார். நிர்வாகிகள் முஷ்தாக்அகமத், சாப்ஜான், காதர்உசேன், ஷாபுத்தீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏஜாஸ், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மாணிக்கம், ஜம் இய்யத் உலமா மாவட்ட துணைத்தலைவர் நசீர்நத்வி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட வர்த்தக அணி தலைவர் முபாரக், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் ஷனாவுல்லா, முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ஷபியுல்லா வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஷப்பீர்அகமத் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.

இதல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில பேச்சாளர் முகமதுஜர்ஜிஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சலாமத் ஆகியோர் பங்கேற்று கண்டன ஆற்றினர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுப்பிரமணின், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜேசு துரைராஜ், திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சவுகத்அகமத் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப் பட்டன.

Next Story