விவசாயியை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு


விவசாயியை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 10:45 PM GMT (Updated: 6 Dec 2018 7:28 PM GMT)

விவசாயி கொலை வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் செங்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 63). விவசாயி. இவரது மகன் யுவராஜ் (27). இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் யுவராஜ் சொந்தமாக ரிக்வண்டி வாங்கி தொழில் செய்ய முடிவு செய்தார்.

இதற்காக பணம் தருமாறு தந்தைக்கு தொந்தரவு கொடுத்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி யுவராஜ் ரிக்வண்டி வாங்க தந்தையிடம் பணம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த யுவராஜ் அரிவாளால் தந்தை கந்தசாமியை வெட்டினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனசேகரன் வாதாடினார். இவ்வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட யுவராஜிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Next Story