ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி புதிய முதல்வரின் பணிக்கு இடையூறு செய்யக்கூடாது சென்னை பல்கலைக்கழகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி புதிய முதல்வரின் பணிக்கு இடையூறு செய்யக்கூடாது சென்னை பல்கலைக்கழகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Dec 2018 9:30 PM GMT (Updated: 6 Dec 2018 8:37 PM GMT)

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் புதிய முதல்வரின் பணிக்கு இடையூறு செய்யக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் செயலாளர் சூசன் மேதிகல், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எங்கள் கல்லூரியின் புதிய முதல்வராக ரோஸி ஜோசப் என்பவர் கடந்த ஜூன் 6-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க சென்னை பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது. சிறுபான்மையின கல்லூரி என்பதால் முதல்வரின் நியமனத்தில், பல்கலைக்கழக மானியக்குழு விதிகள் பொருந்தாது.

எனவே, முதல்வர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த சென்னை பல்கலைக்கழகத்தின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். புதிய முதல்வரின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனுவுக்கு பதில் அளிக்கும்படி சென்னை பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ‘மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை கல்லூரியின் புதிய முதல்வரின் பணிகளுக்கு பல்கலைக்கழகம் இடையூறு செய்யக்கூடாது’ என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story