பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர் ஏழுமலை மரணம் தினேஷ் குண்டுராவ் நேரில் அஞ்சலி


பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர் ஏழுமலை மரணம் தினேஷ் குண்டுராவ் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 9:47 PM GMT)

பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர் ஏழுமலை மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர் ஏழுமலை மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மாரடைப்பு ஏற்பட்டதால்...

பெங்களூரு மாநகராட்சியில் சகாயபுரம் வார்டு கவுன்சிலராக இருந்தவர் ஏழுமலை(வயது40). இவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார். இவர் கடந்த மாதம்(நவம்பர்) 11-ந் தேதி தனது மூக்கில் இருந்த கட்டியை அகற்ற, டாக்டர்களின் அறிவுரைப்படி பெங்களூரு பிரேசர் டவுனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டி அகற்றப்பட்டது. பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவரை வார்டுக்கு மாற்றவில்லை. அதன்பிறகு அறுவை சிகிச்சையின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் ஏழுமலை சுயநினைவை இழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏழுமலை மரணம்

இதையடுத்து மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள இன்னொரு தனியார் மருத்துவமனையில் ஏழுமலை சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவருக்கு நினைவு திரும்பவில்லை.

இந்த நிலையில் ஏழுமலை நேற்று அதிகாலை மரணம் அடைந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். அவரது உடல் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் சார்லஸ் விளையாட்டு மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தினேஷ் குண்டுராவ்

அவரது உடலுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மேயர் கங்காம்பிகே, மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் சிவராஜ் மற்றும் கவுன்சிலர்கள், ஆதரவாளர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மறைந்த ஏழுமலைக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

ஏழுமலை மரணம் அடைந்ததை அடுத்து பெங்களூரு மாநகராட்சி அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஏழுமலைக்கு அறுவை சிகிச்ைச செய்த தனியார் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story