கடன் தொல்லையால் புத்தக கடைக்காரர் தற்கொலை மயங்கிய நிலையில் மனைவி மீட்பு


கடன் தொல்லையால் புத்தக கடைக்காரர் தற்கொலை மயங்கிய நிலையில் மனைவி மீட்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 10:15 PM GMT)

கடன் தொல்லையால் புத்தக கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார்நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 54). இவரது மனைவி காஞ்சனா (47). இவர்களுக்கு சீனிவாசன் என்ற மகனும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும் தங்களது வீட்டின் அருகே புத்தக கடை நடத்தி வருகின்றனர்.

தொழில் நஷ்டம் மற்றும் குழந்தைகள் படிப்பு காரணமாக பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதற்கிடையே குடும்ப சூழ்நிலை காரணமாக சீனிவாசன் மும்பையில் வேலைக்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் காலை சீனிவாசன் தனது தந்தைக்கு போன் செய்துள்ளார். அப்போது அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ராதாகிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அவர் தூக்கில் பிணமாக தொங்கிய அறையில் காஞ்சனா மயங்கிய நிலையில் கிடந்தார்.

உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story