பாபர் மசூதி இடிப்பை கண்டித்து சிவகங்கை, திருப்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பை கண்டித்து சிவகங்கை, திருப்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 11:36 PM GMT (Updated: 6 Dec 2018 11:36 PM GMT)

சிவகங்கை, திருப்பத்தூரில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை,

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முகமதுகாலித் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் ஜலாலுதின் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சர்தார்அலி வரவேற்று பேசினார்.

அதில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வழிபாட்டு அமைப்பை அகற்ற வேண்டும், பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் சாதிக்பாட்சா, விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாநில தலைவர் நஜ்மாபேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரியாஸ் நன்றி கூறினார்.

திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே த.மு.மு.க. சார்பில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. த.மு.மு.க. மாவட்டத் தலைவர் துல்கர்னைசேட் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் மஜீத், த.மு.மு.க. மாவட்ட செயலர் கமருல்ஜமான், பொருளாளர் ஷஹிபுல்பர்கி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இம்ரான்கான், மாநில செயற்குழு உறுப்பினர் உதுமான்அலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக த.மு.மு.க. நகரத் தலைவர் பொறியாளர் சமஸ்கான் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில வழக்கறிஞர் அணிச் செயலாளர் அப்ரார் அகமது, பாபர் மசூதி இடிப்பு குறித்தும் அதன் போராட்டங்கள் குறித்தும் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்ட முடிவில் நகர் த.மு.மு.க. செயலாளர் ராஜாமுகமது நன்றி கூறினார்.

Next Story