விதிமுறைகளை மீறி கனிமம் ஏற்றிச் செல்லும் லாரிகள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


விதிமுறைகளை மீறி கனிமம் ஏற்றிச் செல்லும் லாரிகள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 7 Dec 2018 10:45 PM GMT (Updated: 7 Dec 2018 5:25 PM GMT)

விதிமுறைகளை மீறி லாரிகளில் கனிமம் ஏற்றிச் செல்லப்படுவதாக கூறி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் காதர்மொய்தீன், குவாரி உரிமையாளர் சங்க தலைவர் தனசேகரன், மணல் லாரி சங்க தலைவர் பன்னீர்செல்வம் என திரளான நிர்வாகிகள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-களிமங்கள் ஏற்றி வரும் அனைத்து வாகனங்களும் பொதுமக்களுக்கும் சாலையில் பயணம் செய்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு தார்ப்பாய் கொண்டு மூடி கனிமங்களை ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், விதிமுறைகளை மீறி லாரிகளில் கனிமங்களை ஏற்றி செல்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இருமடங்காக கட்டணம் வசூலிக்க வேண்டும்.

மேலும் இந்த குற்றச்செயலில் ஈடுபடும் வாகனங்களை குறைந்தது ஒரு மாத காலம் விடுவிக்கக்கூடாது. அதிக பாரம் ஏற்றும் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு குவாரி உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story