சென்னை விமான நிலையத்தில் 83-வது முறையாக கண்ணாடி உடைந்தது


சென்னை விமான நிலையத்தில் 83-வது முறையாக கண்ணாடி உடைந்தது
x
தினத்தந்தி 7 Dec 2018 9:45 PM GMT (Updated: 7 Dec 2018 6:57 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் 83-வது முறையாக கண்ணாடிகள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

விமான நிலையத்தில் இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 25 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 34 முறை சுவர் கண்ணாடிகளும், 6 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒரு முறை விளக்கு கண்ணாடி, ஒரு முறை அறிவிப்பு பலகை டி.வி. என இதுவரை 82 முறை உடைந்து விழுந்து உள்ளன.

இந்த உடைப்பு சம்பவங்களில் மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த நிலையில் 83-வது முறையாக மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் புறப்பாடு பகுதியில் 3-வது நுழைவாயில் மேல்பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீரென கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. 8 அடி நீளம், 4 அடி அகலத்தில் சுவர்போல் பதிக்கப்பட்டு இருந்த 4 கண்ணாடிகள் உடைந்து விழுந்தன.

இதைக்கண்ட ஊழியர்கள் அலறியடித்து ஓடினார்கள். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைந்து விழுந்த கண்ணாடி சிதறல்களை அகற்றினார்கள்.

கண்ணாடி விழுந்தது பற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விமான நிலையத்திற்குள் வேகமாக சென்ற ஒரு வாகனத்தில் இருந்து கழன்று விழுந்த இரும்பு போல்டால் கண்ணாடிகள் உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story