பாப்பாரப்பட்டி அருகே சரக்கு வேன் மோதி பெண் சாவு


பாப்பாரப்பட்டி அருகே சரக்கு வேன் மோதி பெண் சாவு
x
தினத்தந்தி 7 Dec 2018 10:30 PM GMT (Updated: 7 Dec 2018 7:01 PM GMT)

பாப்பாரப்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த போது சரக்கு வேன் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மேல் எண்டப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருடைய மனைவி விஜியா (வயது 35). கணவன்-மனைவி 2 பேரும் நேற்று முன்தினம் பாப்பாரப்பட்டி வாரச்சந்தைக்கு சென்றனர். அங்கு அவர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் மொபட்டில் ஊருக்கு வந்தனர்.

வேலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் கோவிந்தராஜ் மொபட்டை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். இதனால் விஜியா சாலையோரம் நின்றிருந்தார். அப்போது தர்மபுரியில் இருந்து பாப்பாரப்பட்டி நோக்கி வந்த சரக்கு வேன் விஜியா மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே கோவிந்தராஜ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தார்.

ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜியா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த விஜியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story