9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி; கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்


9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி; கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:15 PM GMT (Updated: 7 Dec 2018 7:10 PM GMT)

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் எதிரே நேற்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெரியாப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் அனைவரையும் வரவேற்றார். துணைத்தலைவர் பெரியதமிழன், இணை செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மாநில துணை பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில செயலாளர்கள் ராஜி, பரமானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட மாறுதலை நடைமுறைப்படுத்த வேண்டும், இணையதள பணிகள் செய்ய அனைவருக்கும் மடிக்கணினியுடன் கூடிய அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும், உட்பிரிவு பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையை ஏற்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களை பழுதுபார்த்து மின்வசதி, கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் வட்ட தலைவர்கள் லட்சுமணன், மணிபாலன், சஷ்டிகுமரன், லோகேஷ், ராமதாஸ், நாகராஜன், கருணாநிதி, ரஞ்சித்குமார், முருகன், உமாசங்கர், வெற்றிகொண்டான், பாலாஜி, அமைப்பு செயலாளர் உத்திரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் இந்திரகுமார் நன்றி கூறினார்.


Next Story