வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: வட்டகானல் சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: வட்டகானல் சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 8:10 PM GMT)

கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் எதிரொலியாக, வட்டக்கானல் சோதனைச்சாவடியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொடைக்கானல், 

‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிப்பதற்காக வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வருகை தருவர். ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கொடைக்கானலில் முகாமிட்டு குளிருடன் கூடிய கொடைக்கானலின் அழகை ரசிப்பது வழக்கம்.

குறிப்பாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூதர்களின் வருகை அதிக அளவில் இருக்கும். இதனிடையே நகருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் மிகுந்த வட்டக்கானல் பகுதியில் தங்கியிருந்து சூரியகுளியல் போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபடுவார்கள். இந்நிலையில் யூதர்களுக்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கொடைக்கானல் நகரில் இருந்து வட்டக்கானல் செல்லும் வழியில் பாம்பார் நீர்வீழ்ச்சி அருகே, போலீஸ்துறை சார்பில் கடந்த ஆண்டு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த வழியாக செல்லும் வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதையொட்டி, கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி தலைமையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாஸ்போர்ட்டு குறித்த விவரங்களையும் பதிவு செய்கின்றனர். இதன்மூலம் தினமும் எத்தனை வெளிநாட்டினர் வட்டக்கானல் பகுதிக்கு வருகின்றனர் என்பது குறித்து தெரியவரும்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் 65 வெளிநாட்டினர் வட்டக்கானல் பகுதிக்கு சென்று தங்கியுள்ளனர். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அனைவரின் வருகையும் பதிவு செய்யப்படுகிறது. இது, பிப்ரவரி மாதம் இறுதி வரை தொடரும்’ என்றார்.

Next Story