மீண்டும் நீதிமன்ற உத்தரவு பெற்று தஞ்சை பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சி நடத்தப்படும் ரவிசங்கர் பேட்டி


மீண்டும் நீதிமன்ற உத்தரவு பெற்று தஞ்சை பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சி நடத்தப்படும் ரவிசங்கர் பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 8:28 PM GMT)

மீண்டும் நீதிமன்ற உத்தரவு பெற்று தஞ்சை பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சி நடத்தப்படும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் தஞ்சாவூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 2 தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கார் மூலம் புதுக்கோட்டை அருகே வலையப்பட்டி பகுதிக்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாழும் கலை அமைப்பின் சார்பில், 154 தன்னார்வலர்கள் கள பணியாற்றி வருகின்றனர். மேலும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் அமைப்பின் சார்பில் 84 டன் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

வாழும் கலை அமைப்பின் சார்பில் தஞ்சை பெரிய கோவிலில் விஞ்ஞான வைபவம் நிகழ்ச்சிக்கு 18 விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் தொல்பொருள் துறை, அறநிலையத்துறை உள்ளிட்டவை அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில் தான் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்ததை தொடர்ந்து சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக நான் வேறு இடத்திற்கு மாற்றினேன். கோவில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்க வேண்டும். மீண்டும் நீதிமன்ற உத்தரவு பெற்று தஞ்சை பெரியகோவிலில் தியான நிகழ்ச்சி நடத்தப் படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். ஆனால் அதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்க முடியாது.

யமுனை நதிக்கரை தொடர்பாக வாழும் கலை அமைப்பினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நாங்கள் கட்டிய டெபாசிட் தொகையை மீண்டும் திருப்பிதர நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மொழி அடிப்படையில் தனிநாடு கேட்பது என்பது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் பாரம்பரிய சிலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீப காலமாக இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் உண்மை வெல்லும் என்றார்.

முன்னதாக மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு வந்த வாழும் கலைஅமைப்பின் நிறுவனர் ரவிசங்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story