ஊழியர்கள் பற்றாக்குறையால் உடைந்த மின்கம்பங்களை சீரமைத்த இளைஞர்கள்


ஊழியர்கள் பற்றாக்குறையால் உடைந்த மின்கம்பங்களை சீரமைத்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:30 PM GMT (Updated: 8 Dec 2018 8:43 PM GMT)

ஊழியர்கள் பற்றாக்குறையால் உடைந்த மின்கம்பங்களை இளைஞர்களே சீரமைத்தனர்.

கீரமங்கலம்,

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான மின்கம்பங்கள் உடைந்து நாசமானது. மேலும் ஆயிரக்கணக்கான மின்மாற்றிகளும் சாய்ந்து சேதமடைந்தது. அனைத்து நகரம், கிராமங்களும் இருளில் மூழ்கியது, குடிதண்ணீர் பிரச்சினை தொடங்கியது. இந்த நிலையில் கிராம இளைஞர்கள் முயற்சியால் மின்கம்பங்களின் மேல் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்றப்பட்டது. பின்னர் சில நாட்களுக்கு பிறகு சேலம், கள்ளக்குறிச்சி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் மின்வாரிய ஊழியர்கள் அனைத்து பகுதிகளுக்கு வந்து தீவிரமாக வேலைகள் தொடங்கி ஒரு சில பகுதிகளுக்கு மின்சாரம் கொடுத்தனர்.

இந்த நிலையில் அடுத்தடுத்து மின்பணிக்காக வந்த ஊழியர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் கீரமங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்கு ஆய்விற்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஊழியர்கள் மற்றும் மின்கம்பங்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்பட்டது. அப்போது அதிகமானஊழியர்கள் இப்பகுதிக்கு வருவார்கள் என்று அமைச்சர் சொல்லி சென்றார். ஆனால் புதிய ஊழியர்கள் யாரும் சீரமைப்பு பணிக்கு வரவில்லை. அதனால் ஒவ்வொரு கிராமத்திலும் மின்பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மின்வாரியத்தில் ஊழியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நெய்வத்தளி மேற்கு, கொடிக்கரம்பை, ஆலடிக்கொல்லை, பனங்குளம், செரியலூர், சேந்தன்குடி, வடகாடு மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் மின் சீரமைப்பு பணிகள் பாதியில் நிற்பதை பார்த்த அந்தந்த பகுதி இளைஞர்கள் குடிதண்ணீர் மற்றும் வீட்டுக்கு மின்சாரம் வேண்டும் என்பதால் மின்கம்பங்களை தாங்களே நடுவதும் மின்கம்பிகளை சீரமைத்தும் வருகின்றனர். இருப்பினும் பணிகள் முடிந்தபாடில்லை. அதனால் புயல் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளுக்கும் உடனே மீண்டும் கூடுதல் மின்பணியாளர்களையும், மின்கம்பங்களையும் வழங்கி மின்பாதைகளை சீரமைத்து பொதுமக்களுக்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story