மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: தந்தை-மகள் உடல் நசுங்கி சாவு


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: தந்தை-மகள் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 9:32 PM GMT)

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

புதுக்கடை,

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காஞ்சாம்புரம், தேனாம்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 53), காய்கறி வியாபாரி. இவருடைய மகள் விஜிமோள் (30). இவருக்கு திருமணமாகி ஜிஜின் (35) என்ற கணவரும் 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். விஜிமோள் ஒரு தனியார் காப்பீடு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம் செல்வராஜும், விஜிமோளும் மோட்டார் சைக்கிளில் புதுக்கடைக்கு சென்றனர். அங்கிருந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின்பு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை செல்வராஜ் ஓட்டினார். விஜிமோள் பின்னால் அமர்ந்து இருந்தார்.

புதுக்கடை அருகே பார்த்திபபுரம் பகுதியில் சென்ற போது, பாறைப்பொடி ஏற்றப்பட்ட ஒரு டிப்பர் லாரி அவர்களின் பின்னால் வந்தது. இந்தநிலையில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் தந்தை, மகள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் அதே லாரியின் சக்கரத்தில் சிக்கினர். இதனால் உடல் நசுங்கி அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். உடனே, டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி விட்டார்.

விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் இறந்தவர்களின் உறவினர்களுக்கும், புதுக்கடை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து ஏராளமான உறவினர்கள் அங்கு கூடினர். புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து தந்தை, மகளின் உடல்களை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே லாரி டிரைவர் வெண்டலிகோடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்து குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாரி மோதி தந்தை-மகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story