திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆயிரத்து 508 வழக்குகள் தீர்வு


திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆயிரத்து 508 வழக்குகள் தீர்வு
x
தினத்தந்தி 8 Dec 2018 11:15 PM GMT (Updated: 8 Dec 2018 10:09 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆயிரத்து 508 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

திண்டுக்கல்,

நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

இதையடுத்து, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சிங்கராஜ், மகிளா நீதிபதி கருணாநிதி, கூடுதல் மாவட்ட நீதிபதி மதுரசேகரன், முதன்மை சார்பு நீதிபதி தீபா, உரிமையியல் நீதிபதி விபிசி, மாஜிஸ்திரேட்டுகள் முருகன், பாலமுருகன், தீபா ஆகியோர் தலைமையில் தனித்தனி அமர்வுகள் அமைக்கப்பட்டு மனுக் கள் மீது விசாரணை நடந்தது.

இதேபோல, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம், பழனி உள்பட மாவட்டம் முழுவதும் 13 அமர்வுகள் அமைக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டது. வங்கி வராக்கடன், விபத்து இழப்பீடு உள்பட சுமார் 6 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இதில், 227 வங்கி வராக்கடன் வழக்குகள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 508 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம், மனுதாரர்களுக்கு மொத்தம் ரூ.9 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 542 தீர்வு தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் விஜயகுமார், திண்டுக்கல் வக்கீல்கள் சங்க தலைவர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story