புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி 4 மாவட்டங்களில் 18-ந் தேதி உண்ணாவிரதம்


புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி 4 மாவட்டங்களில் 18-ந் தேதி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 9 Dec 2018 6:57 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி 4 மாவட்டங்களில் 18-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர்,

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசு கோரிய நிவாரண தொகையை முழுமையாக மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடிசை, ஓடு, தொகுப்பு வீடுகள் அனைத்திற்கும் மற்றும் சேதமடைந்த மாடி வீடுகளுக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும். வேலை உறுதியளிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறு, குறு, நடுத்தர என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், 2017-18-ம் ஆண்டிற்குரிய பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனே வழங்கவும், அனைத்து விவசாயிகளின் பயிர் கடனையும் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏக்கர் அளவில் கணக்கிடாமல் தென்னை மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும். மீனவர்களின் பாதிக்கப்பட்ட படகுகள், வலைகளை புதிதாக வழங்கிட வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 1,000 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துரைமாணிக்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், சிவபுண்ணியம், பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story