சீனாவில் நடந்த ‘மிஸ் குளோப்’ அழகி போட்டியில் திருச்சியை சேர்ந்த ஸ்டெபி அமோலியாவுக்கு 6-வது இடம் கிடைத்தது


சீனாவில் நடந்த ‘மிஸ் குளோப்’ அழகி போட்டியில் திருச்சியை சேர்ந்த ஸ்டெபி அமோலியாவுக்கு 6-வது இடம் கிடைத்தது
x
தினத்தந்தி 9 Dec 2018 10:45 PM GMT (Updated: 9 Dec 2018 7:32 PM GMT)

சீனாவில் நடந்த ‘மிஸ் குளோப்’ அழகி போட்டியில் திருச்சியை சேர்ந்த ஸ்டெபி அமோலியாவுக்கு 6 -வது இடம் கிடைத்தது.

திருச்சி,

சீன நாட்டின் தலைநகர் பீஜிங்கில் கடந்த நவம்பர் மாதம் 24-ந்தேதி முதல் டிசம்பர் 3-ந்தேதி வரை ‘மிஸ் குளோப்’ பட்டத்துக்கான அழகிபோட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா உள்பட 40 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் திருச்சியை சேர்ந்த ஸ்டெபி அமோலியா பங்கேற்றார். இவர் ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெற்ற ‘மிஸ் சூப்பர் மாடல் இந்தியா’ என்ற பட்டத்துக்கான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவர் ஆவார். இந்த தகுதியின் அடிப்படையில் மிஸ் குளோப் அழகி போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.

திருச்சி பெண்ணிற்கு 6-வது இடம்

இறுதி சுற்று போட்டியில் முதல் பத்து அழகிகளுக்கான தேர்வு பட்டியலில் இடம் பிடித்த ஸ்டெபி அமோலியாவுக்கு 6-வது இடம் கிடைத்தது. திருச்சி பாலக்கரை துரைசாமி புரத்தை சேர்ந்த ஸ்டெபி அமோலியா தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 26 வயதான இவர் திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் பி.காம், சாரநாதன் பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்தவர். உலக அழகி போட்டியில் 6-வது இடத்தை பெற்ற பின்னர் நேற்று திருச்சியில் உள்ள வீட்டில் பெற்றோரை பார்ப்பதற்காக வந்தார். அப்போது அவருக்கு அவரது தாயார் சில்வியா மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், பள்ளி, கல்லூரி தோழிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பேட்டி

மிஸ் குளோப் அழகி போட்டியில் 6-வது இடம் கிடைத்தது பற்றி ஸ்டெபி அமோலியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மிஸ் குளோப் அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் தமிழ் பெண் என்ற பெருமை எனக்கு கிடைத்து இருக்கிறது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே சென்னையில் மாடலிங் செய்து வருகிறேன். உலக அழகி பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது எனது கனவுகளில் ஒன்று. சீனாவில் நடந்த போட்டியில் எனக்கு 6-வது இடம் கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். இறுதி சுற்று போட்டியில் தமிழ் கலாசார உடையான சேலை அணிந்து எனது திறமையை வெளிப்படுத்தினேன். இந்தியா பற்றி நடுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பல்வேறு மொழி கலாசாரம் இருந்தாலும் ஒற்றுமையில் சிறந்து விளங்கும் இந்தியாவின் பெருமைகள் பற்றி தைரியமாக பதில் அளித்தேன். பெண்கள் எந்த பிரச்சினையையும் தைரியமாக எதிர்கொண்டாலே பாலியல் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். மாடலிங் துறையில் இருந்து சினிமா துறைக்குள் சென்று சாதனை படைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story