மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்


மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Dec 2018 11:04 PM GMT (Updated: 9 Dec 2018 11:04 PM GMT)

மூலனூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 11 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. 5 பேர் படுகாயமடைந்தனர்.

மூலனூர்,

உடுமலையை சேர்ந்த சுரேஷ் (வயது25), கவுதம் (26), தனலட்சுமி (25), திவ்யா (26) இவர்கள் சென்னையில் தங்கி அங்குள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் விடுமுறை தினமான நேற்றுமுன்தினம் சொந்த ஊரான உடுமலை நோக்கி ஒரு காரில் கரூர்-தாராபுரம் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். காரை டிரைவர் ஆண்ட்ரோஸ் (25) ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் உடுமலையிலிருந்து தீபன்சக்ரவர்த்தி (30), இவருடைய மனைவி சத்யா (27) 11 மாத குழந்தை திரோனாவுடன் திருச்சி அருகிலுள்ள பாண்டமங்கலம் செல்ல காரில் வந்து கொண்டிருந்தனர்.

காரை தீபன்சக்ரவர்த்தி ஓட்டி வந்தார். எதிர்எதிரே இவர்கள் வந்த கார் கரூர்-தாராபுரம் சாலையில் மல்லம்பாளையம் அருகே உள்ள ஐ.டி.ஐ அருகே வந்த போது தாராபுரத்திலிருந்து கரூர் நோக்கி வந்த அரசு பஸ்சை தீபன் சக்ரவர்த்தி முந்தி செல்ல முயன்ற போது சென்னையிலிருந்து காரை ஓட்டி வந்த ஆண்ட்ரோஸ் மேற்கு நோக்கி வந்த லாரியை முந்திசெல்ல முயன்ற போது எதிர்பாரதவிதமாக 2 கார்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய வேகத்தில் பின்னால் வந்த அரசு பஸ்சின் முன்பக்கத்திலும் பலமாக மோதியதில் இரு கார்களின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் உடுமலையை சேர்ந்த மென்பொறியாளர்கள் 3 பேர் மற்றும் உடுமலையை சேர்ந்த தீபன்சக்ரவர்த்தி, அவரது மனைவி சத்யா, குழந்தை திரோனா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி மற்றும் போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் 11 மாத குழந்தை திரோனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிந்தது. குழந்தையின் தாய் சத்யா கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கரூர்-தாராபுரம் மெயின் ரோட்டில் ஏற்பட்ட இந்த கோர விபத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story