தேவேந்திர குலத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு


தேவேந்திர குலத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 10 Dec 2018 11:00 PM GMT (Updated: 10 Dec 2018 8:55 PM GMT)

தேவேந்திர குலத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்க வேண்டும் என்று கோரி திருச்சி மாவட்ட கலெக்டரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி மனு கொடுத்தார்.

திருச்சி,

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கட்சியின் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் இருந்த மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், தேவேந்திர குலத்தார் உள்ளிட்ட 7 பட்டப்பெயர்களில் உள்ளவர்களை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அரசாணை வெளியிட வேண்டும், தேவேந்திர குலத்தினரை ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து நீக்கி அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

அவருடன் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் சங்கர், வடக்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் ஊர் தலைவர்களும் வந்திருந்தனர். அவர்கள் தனித்தனியாக எழுதி வைத்திருந்த மனுக்களையும் கலெக்டரிடம் கொடுத்தனர்.

மனு கொடுத்து விட்டு வெளியே வந்த கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘முதல் கட்டமாக 5 நாட்களில் 20 மாவட்ட கலெக்டர்களை சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுக்க இருக்கிறேன். தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அரசாணை வெளியிட வேண்டும், பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திர குலத்தினரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை 4 மாநாடுகள், 2 பேரணிகள் மூலம் விளக்கி இருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சர், பிரதமருக்கும் மனு அனுப்பி இருக்கிறோம். இது எங்களது புதிய கோரிக்கை அல்ல. பல ஆண்டு கோரிக்கை ஆகும். தொல்காப்பிய காலத்தில் இருந்தே இந்த பிரிவினர் வேளாண் தொழில் செய்து வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் இழந்த கவுரவத்தை மீண்டும் வழங்கும்படி கேட்கிறோம்’ என்றார். 

Next Story