பட்டியலின பிரிவினரை தேவேந்திரகுல வேளாளராக அறிவிக்க வேண்டும் தஞ்சையில், டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


பட்டியலின பிரிவினரை தேவேந்திரகுல வேளாளராக அறிவிக்க வேண்டும் தஞ்சையில், டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2018 10:45 PM GMT (Updated: 10 Dec 2018 10:20 PM GMT)

பட்டியலின பிரிவினரை தேவேந்திரகுல வேளாளராக அறிவிக்க வேண்டும் என தஞ்சையில் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

தஞ்சாவூர்,

புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் மாநில பொதுச் செயலாளர் அய்யர், மாவட்ட செயலாளர் வக்கீல் உத்திராபதி மற்றும் கட்சி நிர்வாகிகள், பல்வேறு ஊர் நாட்டாண்மைகள் தஞ்சை கலெக்டர் அண்ணாதுரையை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் வாழும் பள்ளர், குடும்பர், தேவந்திரகுலத்தார், பண்ணாடி, கடையர், காலாடி மற்றும் வாதிரியார் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்படும் 7 சாதிகளும் பட்டியலின பிரிவில் தனித்தனி சாதிகளாக காண்பிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் வெவ்வேறானவை அல்ல.

மாறாக அவை அனைத்துமே தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பிரிவு மக்கள் தான். இந்த 7 சாதி பிரிவுகளையும் இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து கொண்டிருக்கிறோம்.

எங்களையும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து விட்டால் சாதி ரீதியான பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்காது. இந்தியனாகவும், தமிழனாகவும், பிறசாதி, சமய மக்களுடன் எந்த பிணக்குகள் இல்லாமலும் தேவேந்திரகுல வேளாளர் என்ற அடையாளத்துடன் வாழ விரும்புகிறோம்.

சலுகைகளை விட சுய அடையாளமே-சுயமரியாதையே உயிர் மூச்சாக மேலோங்கி இருப்பதால் எங்கள் சமுதாயம் இனியும் பட்டியலின பிரிவில் தொடர்வது பொருத்தமற்றது என்று பெரும்பான்மையான மக்களால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பட்டியலின பிரிவில் நீடிப்பது எங்கள் சமூக மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது. எங்களை தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்து கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப உரிய பங்கினை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியலின வெளியேற்றம் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து புதிய தமிழகம் கட்சி சார்பில் 4 மாநில அளவிலான மாநாடுகளும், 2 பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளன. பட்டியலின பிரிவில் உள்ளவர்களை தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும். பட்டியலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முதற்கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் 200 கிராமங்களை சேர்ந்த நாட்டாண்மைகள், கலெக்டரிடம் மனு அளிக்கின்றனர். இந்த மனுவை தமிழக அரசுக்கு கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் கர்நாடக அரசின் தவறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும். தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story