எண்ணூரில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை வாழ பிடிக்கவில்லை என்று எழுதிய கடிதம் சிக்கியது


எண்ணூரில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை வாழ பிடிக்கவில்லை என்று எழுதிய கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 12 Dec 2018 9:45 PM GMT (Updated: 12 Dec 2018 7:02 PM GMT)

எண்ணூரில் கடந்த சில நாட்களாக மனம் உடைந்த நிலையில், வாழ பிடிக்கவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவொற்றியூர்,

எண்ணூர் தாழங்குப்பம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தேசப்பன். மீனவர். இவரது மகன் பிலிப் (வயது 21). இவர் சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். படித்து கொண்டே வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும் வேலையும் செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாக மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட பிலிப் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் வழக்கம்போல படுக்க சென்றார். காலையில் வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, பிலிப் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் விரைந்து வந்து பிலிப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிலிப் அறையில் சோதனையிட்டபோது ‘எனக்கு வாழ பிடிக்கவில்லை’ என்று ஒரு பேப்பரில் ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளது தெரியவந்தது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story