அரியலூர், பெரம்பலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர்கள் வழங்கினர்


அரியலூர், பெரம்பலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:45 PM GMT (Updated: 12 Dec 2018 7:13 PM GMT)

அரியலூர், பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாமில் பயனாளிகளுக்கு கலெக்டர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அணிக்குதிச்சான் (தெற்கு) கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் 115 பயனாளிகளுக்கு மனைவாரி பட்டா, நத்தம் பட்டா மாற்றம், நிலப்பட்டா மாற்றம் மற்றும் மனைப்பட்டா நகல்களுக்கான ஆணைகள் மற்றும் சமூக பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் 15 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைக்கான ஆணைகள், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மழைத்தூவுவான் மற்றும் விசைத்தெளிப்பான் கருவிகள், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு மழைத்தூவுவான், வீரியரக விதைகள் என மொத்தம் 148 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

முகாமில் வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளின் அலுவலர்கள் தங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தரராஜன், சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி வரவேற்றார். முடிவில் ஆண்டிமடம் தாசில்தார் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி முன்னிலை வகித்தார். ஆலத்தூர் வட்டாட்சியர் ஷாஜகான் வரவேற்றார். முகாமில் மாவட்ட கலெக்டர் சாந்தா, அல்லிநகரம் பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து விபரங்களை கேட் டறிந்து பொது மக்களிடம் எடுத்துக்கூறினார். தொடர்ந்து இம்முகாமில் 286 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 74 லட்சத்து 52 ஆயிரத்து 995 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

இந்த முகாமில் கோட்டாட்சியர் விஷ்வநாதன், வட்ட வழங்கல் அலுவலர் பழனி செல்வன், வருவாய் ஆய்வாளர் பெரியண்ணன், சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் கிருஷ்ணராஜ், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, தாட்கோ உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தனித்துணை கலெக்டர் மனோகரன் நன்றி கூறினார்.

Next Story