புயலால் சேதமடைந்த படகுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்


புயலால் சேதமடைந்த படகுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:45 PM GMT (Updated: 12 Dec 2018 8:12 PM GMT)

புயலால் சேதமடைந்த படகுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் மணியாச்சாமி, மாநில பொதுச்செயலாளர் சின்னதம்பி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கஜா புயலுக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் உயிர்சேதம் குறைந்தது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வது. கஜா புயலால் கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து அடுத்த மாதம் (ஜனவரி) 8 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறும் முழு வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்கமும் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டு மீனவர்கள், பண்ணை குளம், குட்டைகளில் மீன் வளர்ப்பவர்களுக்கு புயல் நிவாரணம் வழங்க வேண்டும். படகுகள் சேதமடைந்ததால் தமிழக அரசு புதிய படகுகளை வழங்கிட வேண்டும்.

முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகள் கஜா புயலால் சேதமடைந்துள்ளது. அதனை அரசு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் கான்கிரீட்டிலான மீனவர் குடியிருப்பு கட்டித்தர வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள், உள்நாட்டு மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் உள்பட அனைவரையும் விடுபடாமல் உரிய கணக்கெடுப்பு செய்து மீனவர் நலவாரியம் மூலமாக பாகுபாடின்றி அனைவருக்கும் சலுகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடற்கரை மாவட்டங்களாகிய திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மீனவர்களை பாதுகாத்திட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில பொருளாளர் சிங்கமுத்து, மாநில துணை செயலாளர் காளிதாஸ், மாநில துணை தலைவர் மாரிமுத்து, தேசியக்குழு உறுப்பினர் கஸ்தூரி, மாநிலக்குழு உறுப்பினர்கள் பரமசிவன், ராமதாஸ், மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ தொழிலாளர்களுக்கு சங்கத்தின் சார்பில் 200 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

Next Story