செல்போன் கடை சேதம்: ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


செல்போன் கடை சேதம்: ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2018 10:15 PM GMT (Updated: 12 Dec 2018 8:39 PM GMT)

நாகையில் செல்போன் கடையை சேதப்படுத்தி ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை வேதநாயகம் செட்டித்தெருவை சேர்ந்தவர் பகுருதீன். இவருடைய மகன் சபீ அகமது (வயது 26). இவர் வெளிப்பாளையம் அண்ணாசிலை அருகே செல்போன் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் கடைக்கு செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அருண்குமார் (30) வந்தார்.

அப்போது அவர் அந்த கடையில் வேலை பார்க்கும் முத்துக்குமாரிடம் ஒரு ஹெட்செட் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொண்டு ரூ.100 மட்டும் கொடுத்துள்ளார். அப்போது அவர், நீங்கள் வாங்கிய பொருட்களின் விலை ரூ.2 ஆயிரத்து 800 என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென அருண்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்போன் கடையில் பணிபுரிந்த ஊழியர்களான முத்துக்குமார், தர்மவேல் ஆகிய 2 பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் கடையில் உள்ள கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினார்.

இதுகுறித்து முத்துக்குமார், சபீ அகமதுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து சபீ அகமது வெளிப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

Next Story