பா.ஜனதாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன பிரசாரம்; நாராயணசாமி - நமச்சிவாயம் வாழ்த்து


பா.ஜனதாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன பிரசாரம்; நாராயணசாமி - நமச்சிவாயம் வாழ்த்து
x
தினத்தந்தி 13 Dec 2018 12:03 AM GMT (Updated: 13 Dec 2018 12:03 AM GMT)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் நூதன பிரசாரத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரி,

நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தொடர்பாக மாநில அரசு மறுசீராய்வு மனு செய்யவேண்டும், இந்திய கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து மாநில உரிமைகளை பறிக்கும் பாரதீய ஜனதாவின் செயலை கண்டித்தும், கவர்னர் கிரண்பெடி புதுவையைவிட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் நேற்று புதுவை நகரப்பகுதியில் பறையடித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். காந்திவீதி-ஈஸ்வரன்கோவில் வீதி சந்திப்பில் இந்த பிரசார பயணம் தொடங்கியது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.

பிரசாரத்தை தொடங்கிய அவர்கள் அந்த இடத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். அப்போது அதன் அருகே நடந்த கடை திறப்பு விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் பிரசாரத்தை கண்ட அவர்கள் அங்கு வந்து அவர்களுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றனர்.

அதன்பின் பிரசாரம் புதுவை நகரப்பகுதியில் நடந்தது. இந்த பிரசாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் முருகன், பெருமாள், நிலவழகன், சீனுவாசன், மதியழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story