பஸ் மீது வெடிகுண்டு வீசிய வழக்கு: கிச்சான் புகாரி உள்பட 11 பேர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்
![பஸ் மீது வெடிகுண்டு வீசிய வழக்கு: கிச்சான் புகாரி உள்பட 11 பேர் நெல்லை கோர்ட்டில் ஆஜர் பஸ் மீது வெடிகுண்டு வீசிய வழக்கு: கிச்சான் புகாரி உள்பட 11 பேர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்](https://img.dailythanthi.com/Articles/2018/Dec/201812140018341055_Bomb-blast-case11-people-including-Kishan-Bukhari-are-in_SECVPF.gif)
பாளையங்கோட்டை அருகே பஸ் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் கிச்சான் புகாரி உள்பட 11 பேர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் அருகே கடந்த 2012-ம் ஆண்டு பஸ் மீது வெடிகுண்டு வீசியதாக மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான் புகாரி, பறவை பாதுஷா, சாலின் என்ற முகமது சாலின், ரபீக் உள்பட 11 பேர் மீது பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கிச்சான் புகாரி, பறவை பாதுஷா, சாலின் ஆகியோர் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை கடந்த 10-ந்தேதி பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு வந்து அங்கு அடைத்தனர்.
இந்த நிலையில், பஸ் மீது வெடிகுண்டு வீசிய வழக்கு நெல்லை கோர்ட்டில் நீதிபதி ஜெயராஜ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பாளையங்கோட்டை சிறையில் இருந்த கிச்சான் புகாரி, பறவை பாதுஷா, சாலின் ஆகிய 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் உள்ள ரபிக் உள்ளிட்ட 8 பேரும் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயராஜ், விசாரணையை வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையடுத்து கிச்சான் புகாரி, பறவை பாதுஷா, சாலின் ஆகிய 3 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூரு சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர்.
கிச்சான் புகாரி வழக்கு மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் ஆஜராகக்கூடிய வழக்குகள் நெல்லை கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சக்கரவர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோர்ட்டு வளாகத்திற்கு வந்த அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டன.
Related Tags :
Next Story