5 மாநில தேர்தலில் தோல்வி: பா.ஜ.க.வுக்கு எதிராக மக்கள் இருப்பது உறுதியாகி உள்ளது தொல்.திருமாவளவன் பேட்டி


5 மாநில தேர்தலில் தோல்வி: பா.ஜ.க.வுக்கு எதிராக மக்கள் இருப்பது உறுதியாகி உள்ளது தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 13 Dec 2018 11:15 PM GMT (Updated: 13 Dec 2018 9:00 PM GMT)

5 மாநில தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பது உறுதியாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

நாகர்கோவில்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பா.ஜனதாவிற்கு எதிரான மன நிலையில் மக்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க முன் வந்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு இவ்வாறு செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பா.ஜனதா 5 ஆண்டு ஆட்சியில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

எச்.ராஜா அவதூறு பேச்சை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அவரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ராகுல்காந்தி தலைமையில் அகில இந்திய அளவில் மதசார்பற்ற கொள்கை கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் ராகுல்காந்தி தான் வெற்றி பெறுவார். உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளே இல்லை.

அப்படி இருக்க உள்ளாட்சி அமைப்புகள் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்?. எனவே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். வருகிற ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story