டெம்போ மீது மோதிய தனியார் பஸ் குளத்தில் கவிழ்ந்தது அய்யப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் படுகாயம்


டெம்போ மீது மோதிய தனியார் பஸ் குளத்தில் கவிழ்ந்தது அய்யப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Dec 2018 11:00 PM GMT (Updated: 15 Dec 2018 4:40 PM GMT)

வில்லுக்குறி அருகே டெம்போ மீது மோதிய தனியார் பஸ் குளத்திற்குள் கவிழ்ந்தது. இதில் ஆந்திரா மாநில அய்யப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அழகியமண்டபம்,

ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே கோதாவரி பகுதியை சேர்ந்தவர் பத்ருகுருசாமி. இவரது தலைமையில் 5 பெண்கள் உள்பட 40 அய்யப்ப பக்தர்கள் ஒரு தனியார் பஸ்சில் சபரிமலைக்கு சென்றனர். பஸ்சை பீஷ்மரராவ் ஓட்டி சென்றார். இவர்கள் சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டனர்.

நேற்று மதியம் 1.15 மணியளவில் வில்லுக்குறியை கடந்து தோட்டியோடு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே கருங்கல் ஏற்றிய ஒரு டெம்போ வந்தது. டெம்போவை மணக்காவிளையை சேர்ந்த விஜயகுமார் (வயது 40) ஓட்டி சென்றார்.


எதிர்பாராத விதமாக அய்யப்ப பக்தர்கள் சென்ற தனியார் பஸ்சும், டெம்போவும் நேருக்கு நேர் மோதியது. இதில் டெம்போவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோரம் உள்ள குளத்தில் கவிழ்ந்தது. பஸ்சுக்குள் இருந்த பக்தர்கள் இடிப்பாடுகளுக்குள் சிக்கி அலறினர்.

விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். அவர்கள் போலீசாருக்கும், தக்கலை தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்து விட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறை ரோந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கிறிஸ்துதாஸ், இரணியல் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்–இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, தக்கலை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சுக்குள் சிக்கி இருந்தவர்களை நீண்ட நேரம் போராடி ஒவ்வொருவராக மீட்டனர்.


இந்த விபத்தில் டெம்போ டிரைவர் விஜயகுமார், பஸ் டிரைவர் பீஷ்மரராவ், பக்ருகுருசாமி மற்றும் 2 பக்தர்கள் என 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலருக்கு லேசாய காயம் ஏற்பட்டது.

பஸ் கவிழ்ந்த குளத்தில் தற்போது தண்ணீர் இல்லை. இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து காரணமாக நாகர்கோவில், திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story