புதிய புயல் எதிரொலி: நாகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


புதிய புயல் எதிரொலி: நாகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 15 Dec 2018 11:00 PM GMT (Updated: 15 Dec 2018 7:21 PM GMT)

புதிய புயல் உருவாக உள்ளதால் நாகையில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடல் சீற்றத்தால் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகப்பட்டினம்,

நாகை-வேதாரண்யம் இடையே கடந்த மாதம 16-ந்தேதி அதிகாலையில் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் பல கிராமங்களில் இதுவரை மின் இணைப்பு கிடைக்காமல் பொதுமக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். புயலால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்தநிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் நேற்று மதியம் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டது.

நாகையில் நேற்று காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, செருதூர், காமேஸ்வரம், விழுந்தமாவடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் தங்களது படகுகளை நாகை கடுவையாற்று பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Next Story