மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை செய்வதை தடுக்க அதிரடி நடவடிக்கை - போலீஸ் அதிகாரிகளை தண்டிக்கவும் முடிவு


மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை செய்வதை தடுக்க அதிரடி நடவடிக்கை - போலீஸ் அதிகாரிகளை தண்டிக்கவும் முடிவு
x
தினத்தந்தி 15 Dec 2018 10:45 PM GMT (Updated: 15 Dec 2018 8:58 PM GMT)

மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுவதை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, மதுவிற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி பல்வேறு இடங்களில் மதுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இதற்கு முழுமையாக தீர்வு கிடைக்கவில்லை. சில இடங்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்களுக்கு போலீஸ் துறையில் இருந்தும் சிலர் உதவி செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மதுவிற்பனை செய்வதை முற்றிலும் தடுக்கும் வகையில் போலீஸ் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்வதை முற்றிலும் தடுக்கவும், தங்கள் பகுதியில் இதுபோன்ற அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படவில்லை என்ற நிலையை உருவாக்கி அதுகுறித்த உறுதிமொழியை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

அவ்வாறு போலீஸ் அதிகாரிகளால் உறுதி அளிக்கப்பட்ட பிறகும், அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்பட்டால் சம்பவ இடத்துக்கு உட்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மதுவிற்பனை செய்வோரை பிடிக்க கடந்த சில நாட்களாக போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும், மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மதுவிற்பனை செய்த 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மீண்டும் மதுவிற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் இருந்தும் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படவில்லை என்பது தொடர்பான உறுதிமொழி பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது. அதன்பேரில் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களும், பொது இடங்களில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்பட்டால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கோ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கோ தகவல் தெரிவிக்கலாம்’ என்றார்.


Next Story