பிராட்வேயில் பரிதாபம் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 2 வயது குழந்தை பலி


பிராட்வேயில் பரிதாபம் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 2 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 17 Dec 2018 3:45 AM IST (Updated: 16 Dec 2018 9:33 PM IST)
t-max-icont-min-icon

பிராட்வேயில், கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

பிராட்வே,

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 29). மெக்கானிக். இவருடைய மனைவி சூர்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள். சூர்யா, தனது குழந்தைகளுடன் பிராட்வே சிங்கர் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

அவருடைய சித்தி மகேஸ்வரி, அதே பகுதியில் நடைபாதையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை சூர்யாவின் 2-வது குழந்தையான பூமிகா(2), டிபன் கடை அருகே விளையாடி கொண்டிருந்தது.

அப்போது மதியம் சாப்பாட்டுக்காக டிபன் கடையில் பெரிய பாத்திரத்தில் சாம்பார் தயாரித்து கீழே வைத்து இருந்தனர். அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பூமிகா, எதிர்பாராதவிதமாக கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்து விட்டது. இதில் குழந்தையின் உடல் வெந்தது.

வலியால் அலறி துடித்த குழந்தையை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று குழந்தை பூமிகா பரிதாபமாக உயிரிழந்தது.

இதுபற்றி எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story