புயலில் மரம் விழுந்ததால் மின்கம்பி தண்ணீரில் மூழ்கியது: வாய்க்காலில் இறங்கிய தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு


புயலில் மரம் விழுந்ததால் மின்கம்பி தண்ணீரில் மூழ்கியது: வாய்க்காலில் இறங்கிய தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு
x
தினத்தந்தி 16 Dec 2018 11:00 PM GMT (Updated: 16 Dec 2018 6:39 PM GMT)

கோட்டூர் அருகே கஜா புயலில் சாய்ந்த மரம் மின்கம்பி மீது விழுந்ததால் மின்கம்பி வாய்க்காலில் மூழ்கியது. இதை அறியாமல் வாய்க்காலில் இறங்கிய தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள நெம்மேலி ஜீவா தெருவை சேர்ந்தவர் முருகையன்(வயது45). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஜான்சிராணி மற்றும் உறவினர்கள் அவரை தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேற்று காலை அருகே உள்ள வயலுக்கு சென்ற ஒருவர் முருகையன் வாய்க்காலில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு சென்று முருகையன் உடலை பார்த்தனர்.

அப்போது அருகே இருந்த மின் கம்பி மீது கஜா புயலால் சாய்ந்த ஒரு மரம் விழுந்ததில் இந்த மின்கம்பி வாய்க்காலில் விழுந்து மூழ்கியிருந்ததும் இதை கவனிக்காமல் முருகையன் வாய்க்காலில் இறங்கியதால் அவர் மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்தது.

வாய்க்கால் நீரில் மின்சாரம் பாய்ந்திருந்ததால் 4 பாம்புகள் மற்றும் மீன்களும் இறந்து மிதந்தன. இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story