திருபுவனையில் பயங்கர சம்பவம்: ஓட்டல் தொழிலாளி அடித்துக்கொலை


திருபுவனையில் பயங்கர சம்பவம்: ஓட்டல் தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 17 Dec 2018 1:28 AM GMT (Updated: 17 Dec 2018 1:28 AM GMT)

திருபுவனையில் ஓட்டல் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். மற்றொரு தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருபுவனை,

புதுவை மாநிலம் திருபுவனையை அடுத்த கலித்தீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன். மதகடிப்பட்டில் உள்ள இவருக்கு சொந்தமான இடத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜன் (28) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இந்த கடையில் திருமங்கலம் விடத்தகுளம் பகுதியை சேர்ந்த குருசாமி(51) என்பவரும், திருமங்கலம் தொட்டியபட்டியை சேர்ந்த கண்ணன்(44) என்பவரும் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் கடை உரிமையாளர் நாகராஜன் திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்.

இரவு குருசாமியும், கண்ணனும் வியாபாரம் முடிந்ததும் கடையின் உள்ளே மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் தடியால் குருசாமியை சரமாரியாக தாக்கினார். இதனால் அலறி துடித்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

பின்னர் கண்ணன் அங்கிருந்து தப்பி இரவோடு இரவாக மதுரைக்கு சென்று விட்டார். அப்போது அவர் ஓட்டல் உரிமையாளரிடம் போனில் தொடர்பு கொண்டு, குருசாமியை அடித்து போட்டு விட்டேன் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் நாகராஜன் பதற்றத்துடன் ஊர் திரும்பினார். நேற்று காலை கடையை திறந்து பார்த்த போது குருசாமி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருபுவனை போலீசுக்கு நாகராஜன் தகவல் தெரிவித்தார். உடனடியாக திருபுவனை இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு குருசாமியின் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கண்ணனை பிடிக்க தனிப்படை மதுரை விரைந்துள்ளது. கடைகள் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் மதகடிப்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story