கபாலீசுவரர் கோவில் சிலைகள் கையாடல் வழக்கில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்


கபாலீசுவரர் கோவில் சிலைகள் கையாடல் வழக்கில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:15 PM GMT (Updated: 17 Dec 2018 6:46 PM GMT)

சென்னை கபாலீசுவரர் கோவிலில் 3 சிலைகள் மாயமான வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு கும்பகோணம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டது.

கும்பகோணம்,

சென்னை கபாலீசுவரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகத்துக்காக பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றது. அப்போது கோவிலில் உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் சிவனுக்கு பூஜை செய்யும் மரகதத்தால் ஆன மயில் சிலையும், ராகு, கேது ஆகிய சிலைகளும் இருந்தது. திருப்பணியின்போது இந்த சிலைகள் அகற்றப்பட்டு புதிய சிலைகள் அங்கு வைக்கப்பட்டன.

இதற்கு கோவில் அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அகற்றப்பட்ட 3 சிலைகளும் ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தி பூமியில் புதைத்திருக்க வேண்டும். ஆனால் 3 சிலைகளையும் கோவில் நிர்வாகத்தினர், பூமியில் புதைக்கவில்லை. இந்த நிலையில் கோவிலில் இருந்த அந்த சிலைகள் திடீரென மாயமானது. இந்த சிலைகள் கையாடல் செய்யப்பட்டதாக திருமகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சிலைகள் மாயமானதில் கோவில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தி கோவிலில் அப்போது செயல் அலுவலராக இருந்தவரும், தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராகவும் உள்ள சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த திருமகள்(வயது 53) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட திருமகளை கும்பகோணத்தில் உள்ள கோர்ட்டுக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக திருமகளுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கோர்ட்டுக்கு விடுமுறை நாள் என்பதால் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அய்யப்பன் பிள்ளை வீட்டில் திருமகளை போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது, நீதிபதி அய்யப்பன்பிள்ளை, கூடுதல் ஆணையர் திருமகளை 17-ந் தேதி(நேற்று) காலை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தர விட்டார். இதையடுத்து போலீசார் திருமகளை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்க வைத்தனர். அதனை தொடர்ந்து திருமகளை நேற்று காலை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

காலை 11 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதியிடம் திருமகள் தரப்பு வக்கீலும், அரசு தரப்பு வக்கீலும் தங்களுடைய வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை சிறிது நேரம் நீதிபதி ஒத்திவைத்தார். பின்னர் மதியம் 1 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திருமகளுக்காக கும்பகோணத்தைச் சேர்ந்த அறநிலையத்துறை ஆய்வாளர் ஆர்.சுதாவும், துறையூரைச் சேர்ந்த உறவினர் ரமேஷூம் ஜாமீன் தருவதாக நீதிபதியிடம் கூறினர். இருநபர் ஜாமீனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, திருச்சியில் தங்கி தினமும் காலை 10 மணிக்கு அங்குள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என திருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Next Story