என்.எல்.சி. 3-வது சுரங்கத்திற்கு எதிர்ப்பு, 30 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் - விருத்தாசலம் அருகே பரபரப்பு


என்.எல்.சி. 3-வது சுரங்கத்திற்கு எதிர்ப்பு, 30 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் - விருத்தாசலம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 10:00 PM GMT (Updated: 17 Dec 2018 10:11 PM GMT)

என்.எல்.சி. 3-வது சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 கிராம மக்கள் நேற்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்மாபுரம், 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ளது என்.எல்.சி. இந்தியா நிறுவனம். இங்குள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் நிறுவனம் தனது தேவைக்கு போக, எஞ்சிய நிலக்கரியை பல்வேறு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்தும் வருகிறது.

இந்த நிலையில் தற்போது 11.50 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் வகையில் என்.எல்.சி. நிர்வாகம் 3-வதாக திறந்த வெளி சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம், விளக்கப்பாடி, வீரமுடையாநத்தம் அகரஆலம்பாடி உள்ளிட்ட சுமார் 30 கிராமங்களில் 4841.99 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த பகுதிகளில் சுரங்கம் அமைக்க கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக கிராம மக்களிடையே நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக அனைவரும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். இருப்பினும் நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்த முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கம்மாபுரம், சிறுவரப்பூர், க.புத்தூர், ஓட்டிமேடு, சாத்தப்பாடி, பெருந்துரை, பெருவரப்பூர், விளக்கப்பாடி, தர்மநல்லூர், ஊ.அகரம், கோபாலபுரம், சு.கீணனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்பு கொடி ஏற்றி உள்ளார்கள்.

மேலும் ‘கோ பேக் என்.எல்.சி.’, ‘என்.எல்.சி. நிர்வாகமே எம் நிலத்தின் கைப்பிடி மண்ணை கூட உனக்கு தரமாட்டோம்’ என்று கூறி கிராம மக்கள் பேனர்களை பல்வேறு இடங்களில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி அடுத்த கட்ட போராட்டங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளனர். இதில் முதற்கட்டமாக, நேற்று இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறுவரப்பூரில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்து பேசினர்.

கூட்டத்தில் என்.எல்.சி.க்கு நிலங்களை தரமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகலை மாவட்ட கலெக்டர் தொடங்கி குடியரசு தலைவர் வரை அனைத்து உயர்மட்ட அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் அனுப்பி வைப்பது என்று முடிவு செய்தனர்.

கூட்டம் முடிவடைந்த பின்னர், 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் அனைவரும் திடீரென அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது என்.எல்.சி. நிர்வாகத்தையும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த கம்மாபுரம் போலீசார் விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை, நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர்.

அப்போது என்.எல்.சி. நிறுவனம் எங்களது நிலங்களை கையகப்படுத்த முயற்சித்தால் பலகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்து அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story