ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 Dec 2018 11:00 PM GMT (Updated: 18 Dec 2018 8:51 PM GMT)

ஜனவரி 1-ந்தேதிக்கு பின்னர் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவோர் மீது சட்டப்படி உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என கரூர் அருகே நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

கரூர்,

தமிழகம் முழுவதும் வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வருகிறது. இதையொட்டி பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்புணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக கரூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மின்னாம்பள்ளி பஞ்மாதேவி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டார். அப்போது பாலித்தீன் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாடு நம்மிடையே எப்படி வந்தது? இதனால் நிலமாசுபாடு ஏற்படுவது குறித்தும், மண்ணில் மக்காத பாலித்தீன் பைகளால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் தீங்கு குறித்தும் மக்களுக்கு விளக்கப் பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசிய போது கூறியதாவது:-

வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாடு தடை நடைமுறைப்படுத்தப் படவுள்ளது. எனவே, ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட் களான பிளாஸ்டிக் பைகள், மேசைமீது போடுவதற்காக பயன்படுத்தப்படும் பிளாஸ் டிக் தாள்கள், தட்டுகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட டீ கப்புகள், டம்ளர்கள், குடிநீர் பாக்கெட்டுகள் போன்றவற்றை தயாரிக்கவோ, இருப்பு வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும். அரசு அலுவலர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள். கால் நடைகள், பறவைகள் போன்றவை நம்மால் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட் களை உட்கொள்ளுவதால் உணவுக்குழலில் அடைப்பு ஏற்பட்டு மரணமடைகின்றன. வீட்டில் இருந்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட் களால் மண்ணின் தன்மை பாதிக்கப்படுகிறது. சாதாரணமாக பிளாஸ்டிக் பொருட் கள் மக்குவதற்கு 100 முதல் 1,000 ஆண்டுகள் ஆகிறது.

பிளாஸ்டிக் பொருட் களுக்கு மாற்றாக பாக்கு மட்டையால் ஆன தட்டுகள், டம்ளர்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம். சுயஉதவிக்குழுவினர் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப்பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் நல்ல முறையில் விற்பனை செய்யலாம். மாற்றம் என்பது முதலில் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும். நாம் ஒவ்்வொரு வரும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தால் நமது சமுதாயமே பிளாஸ்டிக் இல்லாத சமூகமாக உருவெடுக்கும். எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பரமேஸ்வரன், செல்வி, மண்மங்கல் வட்டாட்சியர் ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story