மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் போலீசாருக்கு மாவட்ட சூப்பிரண்டு எச்சரிக்கை


மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் போலீசாருக்கு மாவட்ட சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Dec 2018 10:45 PM GMT (Updated: 19 Dec 2018 7:26 PM GMT)

மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சூப்பிரண்டு ஜோர்ஜிஜார்ஜ் எச்சரித்து உள்ளார்.

சேலம், 

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றத்தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜிஜார்ஜ் தலைம்ை- தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துக்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதன்மூலம் உயிர் இழப்புகள் தடுக்கப்படும். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

அதேபோன்று போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்துதான் மோட்டார் சைக்கிளில் செல்ல வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும். போலீசார் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்களா? என்பதை அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். போலீசார் ஹெல்மெட் அணியாமல் செல்வது தெரிந்தால், இன்ஸ்பெக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி அவர்களது குறைகளை தீர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் 2 வரவேற்பு போலீசாரை நியமிக்க வேண்டும்.

பொதுமக்களிடம் தரக் குறைவாக நடந்து கொண்டால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story