புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் வாங்கித்தருவதாக மோசடியா? பெண்ணிடம் விசாரணை


புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் வாங்கித்தருவதாக மோசடியா? பெண்ணிடம் விசாரணை
x
தினத்தந்தி 19 Dec 2018 10:15 PM GMT (Updated: 19 Dec 2018 7:49 PM GMT)

தஞ்சையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடு, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை, உளூர், நடுவூர், வல்லுண்டாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்கு மத்திய அரசின் மூலம் கடன் உதவியும், நிவாரண உதவியும் பெற்றுத்தருவதாக கூறி விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் தஞ்சை கீழராஜவீதியில் ஒரு வீட்டின் மாடியில் உள்ள முகவரிக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த பெண், வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து குடும்பஅட்டை நகல், பான்கார்டு, ஆதார்கார்டு போன்றவற்றின் நகல்களை வாங்கி உள்ளார்.

மேலும் ஒவ்வொருவரிடமும் விண்ணப்பம் கொடுத்து அதனை நிரப்பி வாங்கி வைத்துள்ளார். இதற்காக ஒவ்வொரு வரும் ரூ.50 முதல் ரூ.250 வரை கொடுத்துள்ளனர். இதில் ரூ.50 விண்ணப்பத்துக்கும், ரூ.200 பான்கார்டு பெறவும் என கூறி உள்ளார். மேலும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த பகுதிக்கு பெண்கள், ஆண்கள் சில நாட்களாக சாரை, சாரையாக வந்து விண்ணப்பத்தை நிரப்பிக்கொடுத்துள்ளனர். ரூ.1 லட்சம் கடன் பெறுபவர்கள் ரூ.50 ஆயிரம் கட்டினால் போதும் என கூறியதால் ரூ.50 ஆயிரம் மானியமாக கிடைக்கிறதே? என ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த சிலர் தஞ்சை மேற்கு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு இருந்த பெண்ணை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண் தஞ்சை கீழராஜவீதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர், போலீசாரிடம், தான் மோசடி எதுவும் செய்யவில்லை என்றும், தான் தெரிந்தவர்களுக்கு லோன் வாங்கிக்கொடுத்துள்ளதாகவும் கூறி உள்ளார். மேலும் பொதுமக்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது யாரும் புகார் அளிக்காததால், எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story