விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி கரூரில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி தொடக்கம்


விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி கரூரில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 19 Dec 2018 10:15 PM GMT (Updated: 19 Dec 2018 9:32 PM GMT)

விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி கரூரில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

கரூர்,

வெளிமாநிலத்தில் இருந்து மின்சாரம் கொண்டுவரும் திட்டம் கரூர் மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது. மின்கோபுரம் அமைத்து செயல்படுத்தும் திட்டம் என்பதால் தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இத்திட்டத்தை விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் பூமிக்கு அடியில் மின்கேபிள்கள் அமைத்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கரூருக்கு முதற்கட்டமாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து காங்கேயம் வழியாக கரூர் க.பரமத்தியில் செயல்படும் பவர் கிரீட்டுக்கு 67 கிலோ மீட்டர் தொலைவில் மின்சாரம் 182 உயர்மின்கோபுரங்கள் மூலம் கொண்டு வரும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இத்திட்டத்தை எதிர்த்து கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தாலுகா மற்றும் மண்மங்கலம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களுக்கு முன் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் இந்த திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த மின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று தென்னிலை அடுத்த காட்டுமுன்னூரில் பவர்கிரீட் அதிகாரிகள் மற்றும் கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, அரவக்குறிச்சி தாசில்தார் பிரபு ஆகியோர் தலைமையில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, விவசாய நிலத்தில் சர்வே எடுத்து மின்கோபுரம் அமைக்க குழி தோண்டும் பணிகள் தொடங்கின.

இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகளான ராமசாமி, ஜெகதீசன் ஆகியோர் கூறியதாவது:-

எங்களது விவசாய நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எங்களுக்கு முக்கியத் தொழிலே ஆடு, மாடுகள் வளர்ப்பதுதான். இந்த உயர் மின்கோபுரம் அமைத்தால் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாது. ஆடு, மாடுகளையும் வளர்க்க முடியாது. உயர்மின்கோபுரம் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பலமுறை விவசாயிகள் அனைவரும் சேர்ந்து மாவட்ட கலெக்டரிடமும், உயர் அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் போலீசார்களை கொண்டு எங்களை அச்சுறுத்தி இந்த பணிகளில் ஈடுபடுகிறார்கள். இதுவரை எங்களை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் திடீரென இன்று (நேற்று) மின்கோபுரம் அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டுகிறார்கள். விவசாய நிலத்தில் உள்ள வேலிகளை அத்துமீறி தள்ளிவிட்டு இந்த பணிகளில் ஈடுபடுகிறார்கள். திருப்பூர் சென்றுள்ள விவசாயிகளுக்கு இதுதொடர்பாக தகவல் கொடுத்துள்ளோம். அவர்கள் வந்தவுடன் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story