குடும்ப தகராறில் பயங்கரம், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து மகன் கொலை - தந்தை தற்கொலை


குடும்ப தகராறில் பயங்கரம், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து மகன் கொலை - தந்தை தற்கொலை
x
தினத்தந்தி 20 Dec 2018 11:30 PM GMT (Updated: 20 Dec 2018 9:46 PM GMT)

கோவை அருகே குடும்ப தகராறு காரணமாக மகனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

துடியலூர்,

கோவையை அடுத்த துடியலூர் கணுவாய் தாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் இடையர்பாளையத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பூவிதா(28), இவர்களுடைய மகள் தேவ தர்சினி (3), மகன் தேஜஸ்(2). மணிகண்டனுக்கும், பூவிதாவுக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. இதேபோல நேற்றுக்காலையிலும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் மணிகண்டன் கடைக்கு சென்று விட்டார். நேற்று மாலை 5.30 மணியளவில் மணிகண்டன் கடையில் இருந்து வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டில் மகன், மகளுடன் தூங்கிக் கொண்டு இருந்த பூவிதா சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தார். அப்போது அருகில் படுத்திருந்த மகள் இருந்தாள். மகனை காணவில்லை. உடனே அவர் எழுந்து சென்று பார்த்த போது மற்றொரு அறையில் கணவன் மணிகண்டன் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அலறியடித்துக் கொண்டு பூவிதா வீடு முழுவதும் மகனை தேடினார். ஆனால் மகனை காணவில்லை. அப்போது வீட்டு முன்பு தரையோடு உள்ள தண்ணீர் தொட்டியின் மூடி திறந்து கிடந்தது. உடனே உள்ளே எட்டி பார்த்தபோது மகன் தேஜஸ் பிணமாக கிடந் தான். இதைக்கண்டு பூவிதா கண்ணீர் விட்டு கதறி அழுது கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சின்னத்தடாகம் போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

விசாரணையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மணிகண்டன் மகனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து மகனை கொன்று விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சின்னதடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Next Story