அரும்பாக்கத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.86 ஆயிரம் திருட்டு


அரும்பாக்கத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.86 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 21 Dec 2018 9:15 PM GMT (Updated: 21 Dec 2018 7:36 PM GMT)

அரும்பாக்கத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.86 ஆயிரம் திருட்டு போனது.

பூந்தமல்லி, 

சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் அலமேலு (வயது 65). இவர், நேற்று முன்தினம் இரவு மதுரவாயலில் உள்ள தனது மகள் வீட்டுக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். மகளுக்கு கொடுப்பதற்காக ரூ.86 ஆயிரத்தை பையில் வைத்து இருந்தார்.

அரும்பாக்கம், என்.எஸ்.கே. நகர் பஸ் நிறுத்தம் அருகே பஸ் வந்தபோது அலமேலுவுக்கு அருகில் அமர்ந்து இருந்த 2 பெண்கள், தங்களிடம் இருந்த சில்லரை காசுகளை கீழே போட்டு விட்டு அது உங்களுடையதா? என அலமேலுவிடம் கேட்டனர். அவர் கீழே குனிந்து அந்த காசுகளை எடுத்தபோது, அந்த பெண்கள் இருவரும் அலமேலு வைத்து இருந்த ரூ.86 ஆயிரம் இருந்த பணப்பையை திருடிவிட்டு, பஸ்சில் இருந்து கீழே இறங்கி சென்று விட்டனர்.

சிறிது தூரம் சென்ற பிறகு பணப்பை இல்லாததைகண்டு அலமேலு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான் அந்த பெண்கள், தனது கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச்சென்று விட்டது அவருக்கு தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story