கண்ணமங்கலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி பிணம் தற்கொலையா? போலீசார் விசாரணை


கண்ணமங்கலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி பிணம் தற்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Dec 2018 10:30 PM GMT (Updated: 22 Dec 2018 2:00 PM GMT)

கண்ணமங்கலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் கிரிஜா (வயது 14). இவர் குப்பம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். கிரிஜா நேற்று முன்தினம் காலை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை கண்ட அவரது உறவினர் மகன் லோகேஷ் என்பவர் கிரிஜாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிரிஜா தனது நோட்டு புத்தகத்தில் அதே ஊரில் வசிக்கும் வாலிபர் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக எழுதி வைத்துள்ளார். இதனை தாய் ஜெயந்தி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி கிரிஜா, தாய் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நோட்டு புத்தகத்தில் எழுதியுள்ளது கிரிஜாவின் கையெழுத்து தானா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story