மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி அரும்பார்த்தபுரத்தில் உண்ணாவிரத போராட்டம்


மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி அரும்பார்த்தபுரத்தில் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2018 10:30 PM GMT (Updated: 22 Dec 2018 8:49 PM GMT)

அரும்பார்த்தபுரம் மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர், இளைஞர்கள், மகளிர் குழு பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலக்குளம்,

புதுச்சேரி-விழுப்புரம் சாலையில், அரும்பார்த்தபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரெயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினைகள் ஏற்பட்டதால் மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டது.

அதைத் தொடர்ந்து நில உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய இழப்பீடு வழங்க உறுதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது மேம்பால பணிகள் மீண்டும் நடந்து வருகிறது.

ரெயில்வேகேட் மூடப்பட்டதால் அவதி

இந்த நிலையில் அங்குள்ள ஜி.என்.பாளையம் ரெயில்வே நிரந்தரமாக மூடப்பட்டது. அதன் காரணமாக

ஜி.என்.பாளையம், அரும்பார்த்தபுரம், எழில்நகர் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அந்த பகுதியில் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் இறுதி ஊர்வலம் கூட செல்ல முடியாமல் தடைபட்டுள்ளது. இறுதி ஊர்வலம் செல்ல வேண்டுமென்றால் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய பாதிப்பு ஏற்படுத்தும் நிலையை கண்டித்தும், ரெயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடிக்கவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

உண்ணாவிரதம்

அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அரும்பார்த்தபுரத்தில் பணிகள் நடந்து வரும் மேம்பாலத்தின் கீழ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதத்தில் முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் அப்பகுதி இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தின்போது அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடிக்காததை கண்டித்தும், ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூடக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

Next Story