பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் மனிதசங்கிலி போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் மனிதசங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2018 11:15 PM GMT (Updated: 24 Dec 2018 10:08 PM GMT)

தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

பெண் கிராம நிர்வாக அலுவலர்களை அவரவர் சொந்த மாவட்டத்தில் பணி புரியும் வகையில் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கணினி வழி சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு ஆகும் செலவை அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி முதல் கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று காலை கருப்பு சின்னம் அணிந்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வல்லம் நம்பர்-1 சாலையில் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர்கள் பத்மநாபன், விமலா, ராஜேஸ்கண்ணா, தனசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story