ஓசூர் அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த யானைகள்


ஓசூர் அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த யானைகள்
x
தினத்தந்தி 25 Dec 2018 10:30 PM GMT (Updated: 25 Dec 2018 8:45 PM GMT)

ஓசூரில் முகாமிட்டுள்ள யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து ராகி, தக்காளி போன்ற பயிர்களை நாசம் செய்தன.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சானமாவு காப்புக்காட்டில், 40-க்கும் மேற்பட்ட யானைகளும், சூளகிரி வனச்சரகத்தில், 5 யானைகளும், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் உள்ள போன்பள்ளம் பகுதியில் 23 யானைகளும், அய்யூர் காப்புக்காட்டில், 20 யானைகளும், பேவநத்தம் பகுதியில் 3 யானைகளும் உள்ளன.

இந்த யானைகள், பல குழுக்களாக வனப்பகுதியில் முகாமிட்டு அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, சானமாவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், பைரமங்கலம் பகுதியில், தக்காளி, ராகி உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தன.

அதேபோல், சூளகிரி வனச்சரக பகுதியில் முகாமிட்டிருந்த 5 யானைகளில், ஒரு யானை மட்டும் தனியாக பிரிந்து, நேற்று முன்தினம் இரவு தேசிய நெடுஞ்சாலையை கடந்து, செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு நேற்று அதிகாலை சென்றது. மற்ற 4 யானைகள், சப்படி பகுதியில் சுற்றித்திரிந்தன. யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வனப்பகுதியையொட்டி உள்ள விளை நிலங்களில் புகுந்து யானைகள் பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்வதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story