காட்பாடியில் கேட்டரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - ஒருதலை காதலால் விபரீதம்


காட்பாடியில் கேட்டரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - ஒருதலை காதலால் விபரீதம்
x
தினத்தந்தி 25 Dec 2018 11:01 PM GMT (Updated: 25 Dec 2018 11:01 PM GMT)

காட்பாடியில் ஒருதலை காதலால் கேட்டரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காட்பாடி,

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மிட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் எட்வின்சேவியர். இவரது மகன் சத்ஜன்ராஜ் (வயது 19). இவர் காட்பாடி காந்திநகரில் உள்ள அவரது பெரியம்மா மேரிசுஜாதா வீட்டில் தங்கி வி.ஜி.ராவ் நகரில் உள்ள ஒரு கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் சத்ஜன்ராஜ் கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது காதலை அந்த பெண் ஏற்கவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை பிரார்த்தனைக்காக மேரிசுஜாதா மற்றும் வீட்டில் உள்ளவர்கள் நேற்று அதிகாலை அருகில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்றனர். பின்னர் காலை 6 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். எனினும் சத்ஜன்ராஜ் தனது அறையில் இருந்து வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மேரிசுஜாதா அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து விருதம்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சத்ஜன்ராஜ் ஒருதலை காதலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story