அரியாங்குப்பத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


அரியாங்குப்பத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Dec 2018 10:00 PM GMT (Updated: 26 Dec 2018 8:04 PM GMT)

அரியாங்குப்பத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரியாங்குப்பம், 

வில்லியனூரை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 46). இவரது கணவர் ரத்தினம் இறந்துவிட்டார். இதனால் அரியாங்குப்பம் புறவழிச்சாலை பாரதியார் நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவரது வீட்டில் 3 பவுன் நகைகள், பணம் திருடு போனது.

இது குறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் மாரியம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் வில்லியனூர் பகுதியை சேர்ந்த மாரியம்மாளுக்கு அறிமுகமான கிருஷ்ணா (20), புதுநகர் ராம்குமார் (22), உதயா, புவி ஆகியோர் வீடு புகுந்து நகை, பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணா, ராம்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிராம் நகைகள், 5 செல்போன்கள், 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள உதயா, புவி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story