பெங்களூரு மாநகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட 911 இருசக்கர வாகனங்கள் சேவை: முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்


பெங்களூரு மாநகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட 911 இருசக்கர வாகனங்கள் சேவை: முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Dec 2018 11:30 PM GMT (Updated: 26 Dec 2018 9:11 PM GMT)

பெங்களூரு மாநகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட 911 இருசக்கர வாகனங்களின் சேவையை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகரில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு புதிதாக 911 இருசக்கர வாகனங்களை அரசு வழங்கியுள்ளது. அந்த புதிய இருசக்கர வாகனங்களை போலீசாருக்கு வழங்கும் நிகழ்ச்சி பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் நேற்று காலையில் நடைபெற்றது.

இதில், முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு போலீசாருக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார். பின்னர் ரோந்து பணியில் ஈடுபடும் இருசக்கர வாகனங்களின் சேவையை முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார், போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பெங்களூரு மாநகர போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள 911 இருசக்கர வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். நகரில் உள்ள 108 சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களுக்கும், 44 போக்குவரத்து போலீஸ் நிலையங்களுக்கும், 2 மகளிர் போலீஸ் நிலையங்களுக்கும், உளவுப்பிரிவு, நகர ஆயுதப்படை, போலீஸ் கட்டுப்பாட்டு அறை போலீசாருக்கு 911 இருசக்கர வாகனங்கள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘புத்தாண்டு பரிசாக பெங்களூரு மாநகர போலீசாருக்கு 911 இருசக்கர வாகனங்களை அரசு வழங்கியுள்ளது. இதற்காக முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பெங்களூரு மாநகர போலீசார் 24 மணிநேரம் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரோந்து வாகனங்கள் போலீசாருக்கு பயன் உள்ளதாக இருக்கும்’ என்றார்.


Next Story